Saturday, June 8, 2019

மருமக்கள்வழி மான்மியம் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை



மருமக்கள்வழி மான்மியம் 1916ல் திருவனந்தபுரத்திலிருந்து வெளிவந்த தமிழன் என்ற இதழில் தொடராக வெளிவந்தது. 1942ல் புதுமைப்பதிப்பகம் புத்தகமாக்கி வெளியிட்டது.  மறுபதிப்பை 2005ல் பாரி நிலையம் வெளியிட்டது. மூலப்பதிப்பில் ஏடு சிதைந்து இருந்ததால் மறு பதிப்பில் பல இடங்களில் சொற்களும், சில வரிகளும் இல்லாமல் ஏடு சிதைந்துவிட்டது என்ற குறிப்பு மட்டுமே உள்ளது நமக்கு இழப்புதான்.
 
இந்த புத்தகம் நாஞ்சில் நாட்டில் உள்ள ஒருவரின் சொத்து அவரது சகோதரியின் மகனுக்குத்தான் உரிமை என்று  முன்பு வழக்கத்தில் இருந்த சட்டத்திற்கு எதிராக புனையப்பட்ட கவிதை வழி கதையாகும்.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பதினாறு வயது பெண், ஒரு பிரபுக்கு ஐந்தாவதாக வாக்கப்படுகிறாள். கணவன் வீட்டில் மாமி, சக்களத்தி, மதினி இவர்களால் அவள் படும் துயரத்திற்கு அளவேயில்லை. அதை அவளே சொல்வதாக இந்நூல் இயற்றப்பட்டுள்ளது.

என்கதை கேளும்! என்கதை கேளும்!
இரக்கமுள் ளோரே என்கதை கேளும்!
நூல்களைக் கற்ற நுண்ணறி வோரே!
நடுநிலை நீதி நடத்தும்நல் லோரே!
மக்களைப் பெற்று வளர்க்கும் சீலரே!

ஏழையென் துயரம் எல்லாம் கேளும்,
காசினி மீதென் கதைபோல் இல்லை.
சீதையின் கதையும் சிறுகதை யாகும்.
பாஞ்சா லியின்கதை பழங்கதையாகும்.
தமியேன் கதைக்குச் சந்திர மதிகதை

என்று கதை ஆரம்பத்திலேயே நாம் உள்ளிழுக்கப்படுகிறோம்.

இந்த உலகம் சிறுக்கும் அளவுக்கு பெரிதாக உள்ள அவளின் துயரக் கதை ஒரிரண்டு நாளில் படிக்க முடியாத  படிக்க படிக்க நீண்டு கொண்டே இருக்கும் மிகப் பெரிய புத்தகமாகும்.

ஐயோ தெய்வமே! ஐயோ தெய்வமே!
உற்றதெ லாம்சொல ஒருகழி நூலாம்.
ஒருநாள் போதுமா! இருநாள் போதுமா?
முற்றும் கேளும் முடிவையும் பாரும்!

சக்களத்தி நால்வரைப் பற்றி...

மனைவியர் வேலை வகையினைக் கேளும்;
தொழுத்துச் சாணம் வழிக்க ஒருத்தி;
தொட்டித் தண்ணீர் சுமக்க ஒருத்தி!
அடுக்களைச் சமையல் ஆக்க ஒருத்தி!
அண்டையில் அகலா திருக்க ஒருத்தி!
அத்தனை பேருக்கும் அடிமை யாளாய்

ஏழை பாவி யானும் ஒருத்தி.
எளியேன் சென்ற நான்முத லாக
எல்லா வேலையும் என்தலை மேலாம்.
பெண்டிர் நால்வரும் பென்ஷன் பெற்றனர்.

 தன் குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றியும், அவர்களது கொடுஞ்செயல்கள் பற்றியும் கண்ணீர் மல்க சொல்லுகிறாள்.

மாமனுக்கும் மருமகனுக்கும் (சகோதரியின் மகன்) நிலப் பிரச்சனை ஏற்பட்ட போது  மாறி மாறி தூற்றிக் கொள்ளும் பேச்சிகளிலும் கவிமணி அவர்கள் பகடி செய்துள்ளார்.

ஆரைக் கேட்டு நீர் ஐந்துகல் யாணம்
அடுக்கடுக் காகச் செய்தீர்? ஐயா!
பட்டப் பெயரும் 'பஞ்சகல் யாணிப்
பிள்ளை' யென்று நீர் பெற்று விட்டீரே!

என்று மருமகன் மாமனைப் பார்த்தும்

ஏழு வருஷமாய் இங்கிலீஷ் படித்தையே,
ஏ, பி, ஸி, டி, எழுதத் தெரியுமா?
எத்தனை பணத்தை வாரி யெறிந்தேன்.

என்று மாமன் மருமகனைப் பார்த்து
பேசுவது  நகைச்சுவை.

மாமனுக்கும் மருமகனுக்கும் சண்டை முற்றிப் போய் நீதிமன்றத்திற்கு வழக்கு செல்கிறது. இதில் தோற்ற மாமன் நோயுண்டு படுக்கையில் விழுகிறான்.
இறக்கும்போது திருவாசகத்தை படி என  அவரின் மகனிடம் கொடுத்தனர். அவன்,

ஆரே தமிழை அறிபவர்? என்றான்;  பள்ளியில் தமிழும் படித்தேனோ? என்றான்,
பரீக்ஷையில் தமிழொரு பாடமோ? என்றான்;
என்னால் படிக்க இயலாது என்னச்
சுவரிற் சாய்ந்து சும்மா இருந்தான்.

என்று கவிமணி அவர்கள், நாஞ்சில் நாட்டில் தமிழ் பாடமாக இல்லாமல் மலையாளம் இருந்ததால் ஏற்பட்ட விழைவுகளையும் குறிப்பிடுகிறார்.

கவிமணியின் கவிதையைப் பற்றி டி.கே.சி தாத்தா அவர்கள் குறிப்பிடும் போது,  "கவிமணியின் கவிதைக்கு உயிரையே கொடுக்கலாம்" என்றார். அந்தளவுக்கு சிறப்புடையது.

ஜோனதன் சீகல் எனும் ஞானப் பறவை - ரிச்சர்ட் பாக்
தமிழில் - அவை நாயகம்
வெளியீடு - விஜயா பதிப்பகம்


மொத்தமுள்ள 63 பக்கத்தில் முதல் 22 பக்கங்களில் கவிஞர். புவியரசு மற்றும் தமிழ் மொழிப்பெயர்ப்பு ஆசிரியர் அவைநாயகன் ஆகியோரது முன்னுரைகளும், மூல நூல் ஆசிரியர் ரிச்சர்ட் பாக் அவர்களின் நேர்காணலும் இடம் பெற்றுள்ளது.

பல முறை பதிப்பகத்தால் புறக்கணிக்கப்பட்ட பிறகு, முதலில் 500 பிரதிகள் மட்டும் 1972ல் வெளிவந்துள்ளது. தற்போது பல மொழிகளில் 4 கோடி பிரதிகள் வெளிவந்துள்ளது.

கடல் பறவை அல்லது கடற்காகம் என்றழைக்கப்படும் சீகல் பறவை உணவுக்காக கடலில் படகை சுற்றி வந்து கிடைத்ததை உண்டு வாழ்த்து கடல் பரப்பிலேயே மடியும். இந்த சாதாரண வாழ்க்கை ஜோனதன் என்ற சீகல் பறவைக்கு பிடிக்கவில்லை. மற்ற சீகல் பறவைகளைப் போல் அல்லாமல் தான் உயர உயரப் பறந்து, இன்று  அடைந்த இலக்கை நாளை முறியடித்து கொண்டே செல்கிறது. இப்படி 5000, 10000 , 20000 அடிகளை அடைந்து அங்கிருந்து 50, 120, 240 கி.மீ வேகத்தில் கீழ்நோக்கி செங்குத்தாக கடல் மற்றும் தரைப் பரப்பை அடைதல் என்று ஒவ்வொரு நாளும் பயிற்சியை விடா முயற்சியுடன் கூட்டிக் கொண்டே செல்கிறது. இதனால் ஜோனதன் அடைந்த துன்பங்கள் அளவற்றது. இறப்பின் அருகே ‍ சென்று வந்தப் பின்னும் தன்முயற்சியை கைவிடவில்லை.

ஜோனதனின் உயரப் பறத்தல் போன்ற செய்கைகள் அதன் கூட்டத்திற்கு பிடிக்காததால் தனித்து விடப்படுகிறது. இது போலவே காலம் செல்லச் செல்ல இளம் பறவைகளான பிளட்ச்சர் மற்றும் பிளட்ச்சரை போன்று சில பறவைகள் கூட்டத்திலிருந்து விலக்கப்பட்டு ஜோனதனை அடைகின்றது. ஜோனதன் அவைகளுக்கு பயிற்சியளித்து அவைகளும் உயரப் பறக்க வைத்து  தன்  நிலையை அடையச் செய்கிறது.

முக்கியமான வரிகள் தடித்த எழுத்துக்களிலேயே தரப்பட்டுள்ளது சிறப்பு. எனக்குப் பிடித்த பல வரிகளில் சில.
"நம் படைப்பின் உன்னதத்தையும் திறனையும் அறிந்து கொண்டாக வேண்டும்".

" விட்டு விடுதலையாக வேண்டும். பறக்கப் பழக வேண்டும்".

"எதிர்காலம் இனிமையாகவும், பிரகாசமாகவும் இருக்கும்".

"சொர்க்கம் என்பது ஓர் இடம் கிடையாது. அது ஒரு நேரமும் கிடையாது. சொர்க்கம் என்பது குறைவில்லாதது. அது ஒரு முழுமை".

"எண்ணிக்கைக்கு எல்லை உண்டு. முழுமைக்கு எல்லை கிடையாது.

"பயணத்தை வெறுக்கும் பறவைகள் எங்கும் நகர்வதில்லை. பயணத்தின் முழுமையைத் தமக்குள்ளே வைத்திருப்பவைதான் எங்கேயும் நினைத்த மாத்திரத்தில் போய்விட முடியும்".

நாமும் ஜோனதனைப் போலவே
 நிர்ணயித்துக் கொண்ட இலக்கை விடாமுயற்சியுடன் முரியடித்துக் கொண்டே சென்று மனசை இலகுவாக்கி பறப்போம்.




நூலின் பெயர் - தமிழ் இதழ்கள் 1915 - 1966
ஆசிரியர் - ரா.அ.பத்மநாபன்
இந்நூலின் ஆசிரியர் 1933-ல் தமது 16 ஆம் வயதிலேயே ஆனந்த விகடன் வழியாகத் தமிழ்ப் பத்திரிக்கை உலகில் நுழைந்தவர். பின்னர், ஜெயபாரதி (1936 - 37), ஹநுமான் (1937), ஹிஸ்துஸ்தான் (1938), தினமணி கதிர் (1965- 66) ஆகிய இதழ்களில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். ஓர் ஆராய்ச்சியாளராக தமிழ் இதழ்களைத் தேடிப் படித்ததோடு, தமிழ் இதழியலின் வளர்ச்சியை நேரடியாகப் பார்த்தும் பணியாற்றியும் வாழ்ந்தும் உணர்ந்தவர். அந்த வகையில் இந்நூலில் இதழியலோடு தொடர்புடைய அந்தக் கால நிகழ்வுகளை தகவல் களஞ்சியமாக நமக்கு வழங்கியுள்ளார்.
இந்நூலில் சுதேசமித்திரன், தேசபக்தன், தமிழ் ஸ்வராஜ்யா, தமிழ்நாடு, இந்தியா, ஜெயபாரதி, ஆனந்தபோதினி, ஆநந்த குண போதினி, விகடன், மணிக்கொடி, தினமணி, ஹிந்துஸ்தான் இதழ்களின் உருவான வரலாறு, அதன் கொள்கைகள், அதில் பணியாற்றியவர்கள் என்று ஒவ்வொரு தகவல்களையும் படிக்கப் படிக்க விறுவிறுப்பும் கூடவே  இதுபோன்ற நல்ல நூல்களைப் படித்தோம் என்ற மன நிறைவும் ஏற்படுகிறது.
இங்கு ஒன்றிரண்டு இதழ்களின் தகவல்களை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.
பொதுவாக எல்லா இதழ்களுமே தேசிய விடுதலைக்கு ஆதரவாய்,  காந்தியக் கருத்துகளை மக்களிடம் பரப்புவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. இதழ்களுக்கு வருவாய் ஈட்டித் தருவன விளம்பரங்கள்தான். மேலேக் குறிப்பிட்ட இதழ்களில் ஜெயபாரதி இதழ் மட்டும் காந்தியக் காங்கிரஸ் கொள்கையை மிகத் தீவிரமாக கடைப்பிடித்தது. இதனால் அந்நிய நிறுவனங்களின் விளம்பரங்களை வெளியிடுவதில்லை என்ற வைராக்கியத்துடன் இதழை நடத்தினர். இதழாசிரியர் முதல் கடைநிலை ஊழியர் வரை உயர்ந்த லட்சியத்துக்காக வலிய வறுமையை ஏற்றார்கள்.
இந்தியன் எகஸ்பிரஸ் ஆங்கில நாழிதலின் ஒரு பகுதியாக தினமணி உருவானது. தினமணி என்றப் பெயர் சிறப்பான பெயரை அனுப்புபவருக்கு ரூ.10 வழங்கப்படும் என்ற பரிசுப் போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இவ்விதழ்களை மும்பையிலிருந்து நிர்வாகத்தைநடத்தி வந்தவர் சதானந்து என்ற தமிழர்.  இவரும் விடுதலை வேட்கை கொண்டவர். இதழ்களையும் அவ்வாறே நடத்த விரும்பினார். இவரது தந்தையும் ஓர் இதழாசிரியர். தினமணியின் ஆசிரியப் பொறுப்பை எஸ். வி.சாமி அவர்களும், இணை ஆசிரியர் பொறுப்பை டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களும் ஏற்று நடத்தினர்.
இந்திய இதழ்களுக்கு அந்தக் காலத்தில் செய்தியை வழங்கும் நிறுவனமாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் மட்டுமே இருந்தது. இந்நிறுவனம் பிரிட்டிஷ் அரசு சார்புடைய நிறுவனம் என்பதால் பல முக்கியமான செய்திகளை மறைத்தது.  இதை உணர்ந்த சதானந்து அவர்கள்  ராய்ட்டர் நிறுவனம் தராத தேசிய முக்கியம் வாய்ந்த செய்திகளைத் தருவதற்காக "ப்ரீ ப்ரஸ் ஆஃப் இந்தியா" என்ற செய்தி வழங்கும் நிறுவனத்தை துவங்கினார். ஆனால் பெரிய பத்திரிக்கை நிறுவனங்கள் ப்ரீ ப்ரெஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்திலிருந்து செய்திகளை வாங்கி வெளியிட தயங்கின. வருவாய் இருந்தால் தானே தொடர்ந்து நிறுவனத்தை நடத்த முடியும்? தேசியச் செய்திகளை கொடுத்தாலும் வெளியிடும் பத்திரிக்கை அதிகம் இல்லை என்பதால் சதானந்து அவர்கள், தாமே தேசமெங்கும் பத்திரிக்கைகளை நடத்தலாம் என்று முடிவு செய்கிறார்.
அதன் பிறகுதான் ஆங்கிலத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ், தமிழில் தினமணி மற்றும் தெழுங்கு, குஜராத்தி மொழிகளிலும் ஆரம்பிக்கிறார். இதற்கு பலர் உதவி செய்தனர்.
தன் நிறுவன செய்திகளை மட்டும் வெளியிடாமல் ராய்ட்டர், அசோசியேட் பிரஸ் நிறுவனச் செய்திகளையும் வெளியிட்டு வந்தார். திடீரென்று
செய்திகளைத் தருவதை இவ்விரு நிறுவனங்களும் நிறுத்தின. இதனால் வெளிநாட்டு செய்திகள் கிடைப்பது தடைப்பட்டது. இதன் காரணமாக சதானந்து அவர்கள் லண்டனில் செய்தி நிறுவன அலுவலகத்தை திறந்தார். வெளிநாட்டு உடனடிச் செய்திகளைத் தருவவதற்காக, அதிகச் செலவு ஆகும் என்று கூட பார்க்காமல் தினமும் தொலைப்பேசி மூலம் செய்திகளைப் பெற்று வெளியிட்டார்.
ஆங்கில அரசாங்கத்திற்கு எதிரான பல முறை கருத்துகளை வெளியிட்டதால் அவர்களின் பிடியில்  தொடர்ந்து சிக்கினார். இதனால் பத்திரிக்கை நடத்துவதற்கு ஆங்கில அரசாங்கத்திடம் அடுத்தடுத்து கட்டிய ஜாமின் தொகை ஐம்பதாயிரம் வரை இழந்தார். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பத்திரிக்கையை தொடர்ந்து நடத்தி வந்தார். ஐம்பதாயிரம் ரூபாய் என்பது அந்தக் காலத்தில் எவ்வளவு பெரியத் தொகை?   அவர் பணத்தை இழந்ததை சாதாரணமாக எடுத்துக் கொண்டதை நினைத்தால் வியப்பாக உள்ளது!
தமிழ்நாட்டில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி அவர்கள் சுதேசி கப்பல் இயக்கத்தை என்ன நோக்கத்துக்காக தொடங்கினாரோ? அதே நோக்கத்துக்காக மற்றொரு தமிழரான சதானந்து அவர்கள் பத்திரிக்கை நிறுவனத்தை தொடங்கினார். ஆனால் சதானந்து அவர்களுக்கு எந்த புகழும் கிட்டவில்லை. மறைக்கப்பட்டுவிட்டது.
சதானந்து அவர்களின் தொடக்க கால முயற்சிகளெல்லாம் வழிகாட்டிய அனுபவத்தால், நாடு சுதந்திரம் பெற்றதும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் தீவிர முயற்சியால் " பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா" என்ற இந்திய செய்தி நிறுவனம் உருவானது.
தினமணி தொடர்பான பல தகவல்கள் 158 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் 50 பக்கங்கள் உள்ளன. ஆனால் சுருக்கமாக சில நிகழ்வுகளை மட்டுமே கூற இயலும் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
இதில் குறையாக எனக்குப் படுவது: 1915 - 1966க்கு இடைப்பட்ட காலங்களில் கல்கி, தீபம், விடுதலை போன்ற இன்னும் பல இதழ்கள் இருந்திருக்கின்றன. அவைகளைப் பற்றி குறிப்பிடாமல் நூலாசிரியர் தவிர்த்துள்ளார். குறிப்பிட்ட அந்தக் காலங்களில் இருந்த எல்லா நாழிதழ்களையும் இந்நூலில் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனாலும் இது ஒரு தகவல் களஞ்சியமே.





நூல் : பேராசிரியர் கி.ரா சில நிகழ்ச்சிகளும் சில நினைவுகளும்

ஆசிரியர் : சிலம்பு நா.செல்வராசு

வெளியீடு : அன்னம் பதிப்பகம்

தாத்தா கி.ரா அவர்களின் 95 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு இந்நூல் வெளியிடப்பட்டது. "நான் மழைக்குத் தான் பள்ளிகூடம் ஒதுங்கினேன். மழையையே பார்த்துக்கொண்டு இருந்து விட்டேன்" என்று கூறும்  தாத்தா அவர்கள் புதுவை மத்திய சுதந்திர பல்கலைக் கழகத்துக்கு வருதரு பேராசிரியராக எவ்வாறு வந்தார். வரக் காரணமாக இருந்தவர் யார்? பல்கலைக் கழகத்துக்கு வந்தப் பின் நடைபெற்ற நிகழ்வுகள் யாவையும் சுவைப்பட கூறுகிறார் இந்நூல் ஆசிரியர் ஐயா சிலம்பு நா.செல்வராசு.
இவர் தாத்தாவின் உதவியாளராக இருந்தவர்.

தாத்தா அவர்கள் பல்கலைக் கழகத்தில் இருந்தபோது தான் புதுவை நாட்டுப்புற கதைகள் தொகுக்கப்பட்டது. தொகுக்கப்பட்ட முன்னூறுக்கும் மேற்பட்ட கதைகளில் நூற்றைம்பத்து மூன்று மட்டுமே புத்தகம் போட தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்நூலினையும் அன்னம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

நான்கு அறைகளுக்குள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதை தாத்தா விரும்பவில்லை. எனவே அவருக்கான களமாக ஆரோவில் போன்ற வெளியிடங்களை அமைத்துக் கொண்டார். பாடம் நடத்துவது என்பது விவாதிப்பதும், கலந்துரையாடல்களும் மட்டுமே உடையது. அதேபோல் பல்கலைக் கழகத்திலிருந்த தன்னுடைய அலுவலகத்தை வீட்டிற்கே மாற்றம் செய்து கொண்டார். தாத்தாவிடம் பயின்ற மாணவர்கள் இன்றும் தாத்தாவுடன் நெருக்கமான உறவில் உள்ளனர். மாணவர்கள் வீட்டு விழாக்களிலும் தாத்தா கலந்து கொள்கிறார். பலர் பேராசிரியர்களாக உள்ளனர்.

84 பக்கங்களே உள்ள இச்சிறு நூல் இதிலுள்ள தகவலின் அடிப்படையில் தனியிடம் பிடித்துக் கொள்ளும் என்பது மிகையல்ல.

மருமக்கள்வழி மான்மியம் - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மருமக்கள்வழி மான்மியம் 1916ல் திருவனந்தபுரத்திலிருந்து வெளிவந்த தமிழன் என்ற இதழ...